தமிழிஷ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தமிழிஷில் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் இருந்து பக்கங்கள் பகிரப்பட்டாலும் பெரும்பாலான பங்களிப்பு வலைப்பதிவர்களிடம் இருந்தே வருகிறது. எண்ணிக்கையில் ஒப்பிடும் போது தமிழ் இணையதளங்களை விட தமிழில் அதிகம் வலைப்பதிவுகள் உள்ளன. தினமும் புதிதாய் பலர் வலைப்பதிவு துவங்குகின்றனர். சமூக விஷயங்கள், சினிமா, கதை, கட்டுரை, கவிதை, தொழிநுட்பம் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வலைப்பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றை அதிக வாசகர் பரப்பிற்கு கொண்டு செல்லும் வேலையை தமிழிஷ் செவ்வனே செய்து வருகிறது. வெற்றிகரமான பல பதிவர்கள் தமிழிஷில் பயனர்களாக இருப்பது மகிழ்வான விஷயம்.
நீண்ட நாட்களாகவே தமிழிஷ், வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் போட்டிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழிஷ் தளத்தை நிர்வகிக்கும் சுமையுடன் இது போன்ற போட்டிகள் நடத்துவது கூடுதல் சுமையாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலேயே அதற்கான முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே இருந்தன.
இந்நிலையில் தமிழிஷில் அதிகம் கவரப்பட்ட பதிவர்களை அங்கீகரிப்பது முக்கியமானது என்பதனை தமிழிஷ் உணர்ந்தே இருக்கிறது. இதன் துவக்கமாக இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழிஷில் வாசகர்களால் அதிகம் கவரப்பட்ட பதிவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு தமிழிஷ் துவங்கியது முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி வரை தமிழிஷில் தங்கள் இடுகைகளை பகிர்ந்த பதிவர்களில் அவர்கள் பெற்ற மதிப்பு மிக்க ஓட்டுக்களின் அடிப்படையில் மூன்று பதிவர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம்.
இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் பிரிவு வாரியாக பதிவர்கள் பிரிக்கப்பட்டு மதிப்பு மிக்க ஓட்டுகள் அடிப்படையிலும் , சிறந்த நடுவர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையின் அடிப்படையிலும் பதிவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.
பதிவர்கள், வாசகர்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.